Wednesday, August 27, 2014
Monday, August 25, 2014
சித்தம் தெளியவைத்து , பாவங்கள் போக்கும் திருக்கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரன்.
முன்பொரு சமயம் கங்கை நதியின் கரையில் சனகர் முதலிய முனிவர்கள் சத்ரயாகம் என்ற யாகத்தைத் துவங்கினர்.யாக நிறைவின் போது சூதமா முனிவர் அங்கு வருகை புரிந்தார். செனகாதி முனிவர்கள் அவரை வணங்கி உபசரித்தனர், அகிலத்தில் அனைத்து பாவங்களையும் போக்க வல்ல கங்கை நதிக்கரை அவருடைய வருகையால் மேலும் புனிதம் பெற்றதாக கூறி வரவேற்றனர், அப்போது சூதமா முனிவர் அவர்களிடத்தில் கங்கை நதிக்கரையைவிடவும் சிறப்பு வாய்ந்ததும், எல்லா பாவங்களையும் போக்கி சுகபோகங்களை வழங்கக்கூடியதுமான ஒரு புண்ணிய க்ஷேத்ரம் காவிரி நதியின் வடகரையில் இருக்கிறது எனக்கூறினார்.
முன்பொரு சமயம் ஓடக்காரி ஒருத்தியிடம் மையல் கொண்டு அவளுடன் கூடிக்களித்திருந்ததனால் பராசர முனிவருக்கு சித்த பிரமை ஏற்பட்டது. அவர் அறம் போதிக்கும் சாத்திரங்களை மறந்தார். சுவாதீனம் ,இன்றி சுற்றித்திரிந்தார். அப்போது வானில் இருந்து ஒரு அசரிரீ அவரை காவிரியின் வடகரையில் உள்ள பலாசவனத்தில் சிவனை ஆராதிக்குமாறு ஆனையிட்டது.
அந்த ஆனையை ஏற்று அவர் பலாசவனத்து பரமசிவனை பூஜித்து வந்தார். அவரது பூஜையின் பயனாய் சிவபெருமான், உமாதேவியோடு தாண்டவக்கோலத்தில் காட்சியளித்து முனிவரின் சித்த பிரமையை நிவர்த்தி செய்தார்.
ஆனந்த பரவசமடைந்த பராசரர், பரமசிவன் தினந்தோறும் அபிஷேகம் கொண்டருளும் விதமாக தாண்டவக்கோலத்தில் அத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டுமேன வேண்டினார். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்து. பராசரருக்கு முக்தியளித்தார்.
அந்தப்புனித்த்தலமே காவிரி வடகரை நோக்கிப்பாயும் பலாசவன க்ஷேத்திரம்! அது திருக்கஞ்சனூர் என்ற நாமத்தில் அறியப்படுகிறது. சூதமா முனிவரிடமிருந்து பலாசவனத்தின் சிறப்புகளைப்பற்றி கேள்விப்பட்ட செனகாதி முனிவர்கள் அந்தத்தலத்தை காண ஆவல் கொண்டனர், சூதமா முனிவர் விடைபெற்றுச்சென்றதும், தம் தவவலிமையினால் அன்றிரவே திருக்கஞ்சனூர் அடைந்தனர். அதிகாலையில் காவிரியில் நீராடி ஆலயம் சென்றனர். கற்பவிநாயகரைக்கரம் குவித்து வணங்கினர்.ஆலயத்துள் எழுந்தருளியிருக்கும் அக்னிபுரீஸ்வரரை பலவிதமாய் போற்றித்தாள் பணிந்து தொழுதனர்.
அப்பொழுது செம்பொன்நிறத்துடன் சூர்யோதயம் நிகழ்ந்தது. தேவர்கள் பூமாரிப்பொழிய, கற்பகாம்பாள் சமேதரராய் அக்னீசப்பெருமான் காட்சி தந்தார். தம்மை தரிசித்த முனிவர்கள் ஆயிரம் சத்ரயாகம் செய்த பலனை பெறுவார்கள் என அருள் புரிந்தார்.
சிவத்தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப்பெற்றது திருக்கஞ்சனூர் திருத்தலம். இத்தலத்தில் ஒருநாள் செய்யப்படும் யாகம் ஆயிரம் சத்ர யாகங்கள் செய்வதற்கு ஒப்பாகும். இங்கே காவிரி தெற்கிலிருந்த வடக்கு நோக்கி பாய்ந்து உத்ரவாஹினி எனும் வடகாவேரியாக ஓடுகிறது. இந்த நதியில் ஒருமுறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரண்டு ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்கும்.
தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது, அக்னீஸ்வரர் திருக்கோவில். கிழக்கு நோக்கி எழுந்தருளியிள்ள அக்னீஸ்வரருக்கும், கற்பகாம்பிகைக்கும் தனித்தனித்திருச்சுற்றுகளுடன் உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், பதினாறு கால் மண்டபம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஒரு பெரிய திருச்சுற்றாக மூன்று பிரகாரங்களுடன் கூடிய திருக்கோயில். ராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கிய கற்பக விநாயகர் திருக்கோயிலும், சன்னதித்தெருவில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் ஆலயமும் அமைந்துள்ளன. ஹரதத்தருக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி, புல்லுண்ட நந்தி ஆகிய மூர்த்திகளும் கொழு வீற்றிருக்கும் சிறப்புப்பெற்ற திருக்கோயில்.
சபா மண்டபத்தில் கற்சிலையிலான திருமேனியோடு நடராஜப்பெருமானும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்கின்றனர். இப்பெருமானுக்கு நாள்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற ஆலயங்களில் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
தேவர்களாளும், முனிவர்களாளும் போற்றி வழிபடப்பட்ட திருக்கஞ்சனூர் , சுக்கிரதோஷ நிவர்த்தித்தலமாகவும் அமைந்துள்ளது. அக்னீஸ்வர சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் சுக்கிர பகவான், கிழக்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளார். திருநாவுக்கரசரால் மதிசூடும் பெருமான் எனப்போற்றப்படும் இப்பெருமானே சுக்கிர கிரஹதோஷ பரிகார மூர்த்தி. பிரம்ம தேவரின் மானசபுத்திரரான பிருகு முனிவருக்கும் , புலோமசை என்பவளுக்கும் மகனாகப்பிறந்தவர். இவருக்கு பார்கவன் என்ற பெயருண்டு. சுக்கிர பகவான் மிகச்சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளாள் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றவர்.
அசுரர்களின் குரு, மஹாபலிச்சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது , சுக்ராச்சார்யார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் எனத்தடுத்தார். மஹாபலி அதைக்கேளாமல் நீர் வார்த்துக்கொடுக்க முனைந்தபோது, நீர் வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நுழைந்துகொண்டு, நீர் வராமல் அடைத்துக்கொண்டார். அப்பொழுது மஹாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுல் செறுக, அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்தியது, அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார். வாமனர் ஒரு தர்ப்பைப்புல்லால் கெண்டியின் மூக்கினுள் செருக, அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்தியது எனவும் அதனால் சுக்கிரர் ஒரு கண்ணை இழந்தார் எனவும் சொல்லப்படுவதுண்டு.
இராஜராஜேஸ்வரியை பூஜித்து வருவதாலும், வைரக்கல்லை தரித்துக்கொள்வதாலும், வெள்ளை நிற வஸ்திரத்தையும், வெள்ளியையும், மொச்சை தானியத்தையும் தானம் கொடுப்பதாலும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதாலும் சுக்கிர கிரஹதோஷங்கள் நிவர்த்தியாகும்.
திருத்தலக்குறிப்புகள்
தலத்தின் பெயர் : திருக்கஞ்சனூர்
சுவாமியின் திருநாமம் : ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர், சுக்கிரன்,
எங்கே உள்ளது : தமிழ்நாட்டில், கும்பகோணத்தில்
எப்படி செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் ரயில்,பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம், கும்பகேணத்திலிருந்து பேருந்து, கார்,மற்றும் ஆட்டோ மூலம் திருக்கஞ்சனூர் செல்லலாம்.
எங்கே தங்குவது : கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00
கோயில் முகவரி
செயல் அலுவலர்,
அக்னிபுரீஸ்வரர் திருஙக்கோயில்
கஞ்சனூர் அஞ்சல், துகிலி வழி,
தஞ்சை மாவட்டம் -609 804
தொலைபேசி 0435 – 2473737
Sunday, August 24, 2014
குரு பகவான்
பிரம்ம தேவரின் மானச புத்திரர்க
ளில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவளுக்கும் பிறந்த பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையே குருபகவான் ஆவார். இவர் அறிவிலே மேம்பட்டவர். தேவர்களில் குருவாகத் திகழ்பவர்.
இந்திரனுக்கு அமைச்சராக இருப்பவர்.
சுப கிரகர் முக்குணங்களில் சாத்வீக குணமுடையவர். மஞ்சள் நிறமுடையவர். அதனால் இவரைப் பொன்னன் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாளசிந்தை உடையவர்.
இவருக்கு தாரை, சங்கினி என்று இரு மனைவியர். பாரத்வாஜர், யமகண்டன், கசன் என்று மூன்று புத்திரர்கள். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர் பதவிகளையும், மன மகிழ்ச்சி, திருமணப்பேறு , புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர்.
தக்ஷ்ணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்துவருவதாலும் மஞ்சள் கரை வஸ்த்திரம் உடுப்பதாலும், புஷ்ப்பராக மணியைத் தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்த்திர தானம் செய்வதாலும், கடலை தானியத்தை தானம் செய்வதாலும் குருவார விரதம் இருப்பதாலும் குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடருள்வாய் !
பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோமின்றிக் கடாஷித் தருள்வாய் !!
லேபிள்கள்:
sparkkarthikovai,
ஆலங்குடி,
ஆன்மீகம்,
குரு பகவான்,
நவகிரக கோவில்கள்
Saturday, August 23, 2014
அஞ்ஞானம் அகற்றி நல்ஞானம் நல்கும் ஆலங்குடி ஆபத்சகாயர் மற்றும் குரு பகவான்

காவிரி நதியின் தென்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் திருஇரும்பூளை என்னும் பாடல் பெற்ற தலம் பலவகைகளிலும் சிறப்புடையது,
தேவர்கள் அமுதம் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தினால் அவதியுற்று ஆண்டவனை வழிபட, ஆலமாகிய விஷத்தைக் குடித்துக் காத்தமையால் இத்தலத்துக்கு ஆலங்குடி எனவும் இறைவனுக்கு ஆபத்சகாயர் எனவும் பெயர் வழங்கப்படுகிறது. இந்த ஊரில் அரவு தீண்டி மரித்தவர் இல்லை. கஜமுகாரசுனால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களைக் காத்த விநாயகர் எனப் பெயர்உண்டாயிற்று. குரு கிரக தோஷ நிவர்த்திக்கும் இது ஒரு சிறந்த பரிகாரத்தலம் !
கைலாயத்தில் பார்வதி பாங்கியரோடு பந்தாடிய போது உயரே சென்ற பந்தைப் பிடிக்கக் கையை உயரத் தூக்கி பந்தை எதிர்பார்த்து நிற்க வான வீதியில் சென்ற சூரியன் தன்னை நிற்கச் செய்வதாக்க் கருதித் திகைத்து தேரை நிறுத்தினான். அவன் தொழில் தடைபட்டது. அவனி அவதியுற்றது.
அல்லலுற்றவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சினம் கொண்ட சிவனும் ஒரு கனமும் யோசிக்காமல் பார்வதிக்கு சாபமிட்டார். அந்த சாபத்தின் காரணமாக, காசினியில் காசியாரண்ய தலத்தில் பார்வதி அம்மை அவதரித்தாள். இங்கு தவம் இயற்றி இறைவனைத் திருமணம் செய்து கொண்டால். பார்வதி பரமேஸ்வரன் திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப் பெறுகிறது. அன்னையின் திருமணத்திற்கு வருகை புரிந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், அஷ்டதிக்கு பாலகர், ஐயனார், வீரபத்திரர், முதலானோர் இத்தலத்தில் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்டனர்.
உயரமான மதில்களால் சூழப்பெற்று ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது. கோயிலில் நுழைந்ததும் கலங்காமல் காத்த விநாயகர் தரிசனம் நல்குகிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிராகாரம் எதிரில் சுக்கிரவார அம்மன் சந்நிதி.
அருகிலேயே உமையம்மை என்றும் ஏலவார் குழலியம்மை என்று ஏற்றமுடன் அழைக்கப்பெறும் அன்னையின் தெற்குநோக்கிய சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் சந்நிதி தனியான சுற்றுப் பிரகாரத்தில் உள்ளது. இரண்டாம் வாயிலைக் கடந்து உள்ளே செனறால் தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சப்த லிங்கங்கள், காசி விசாலாட்சி, அகத்தியர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
மேற்குப் பிரகாரத்தில் முருகன், வள்ளி, தேவசேனை சந்நிதியும், இலக்குமி இருப்பிடமும், வடக்கு உட்பிரகாரத்தில் நவ கிரகம், சபாபதி, சிவகாமி அம்மை, சம்பந்தர், அப்பர் மணிவாசகர் முதலியோரும் காட்சி தருகிறார்கள். கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர்,சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
சுவாமி மகா மண்டபத்தில் நந்தி, பலிபீடம் கருவரையில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயரும், அர்த்த மண்டபத்தில் பள்ளி அறை சொக்கரும், போக சக்தி அம்மையும் உள்ளனர்.
தெற்கு கோஷ்டத்தில் இத்தலத்துச் சிறப்பு மூர்த்தியாக குரு தட்சினாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். பல தலங்களையும் தரிசித்து, இந்தத் தலத்துக்கு வந்து கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன்னி நதி, பொங்கும் புனலுடன் சுழித்துச் சுழித்து வெள்ளக் கடலாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் கரையில் அடியார்களுடன் மனம் கலங்கி நின்றார். அந்தச் சமயத்தில் காசியாரண்யேஸ்வரராகிய ஆபத்சகாயர் ஓடக்காரனாக வந்துஅக்கரைக்குக் கொண்டுவிடுவதாகச் சொல்லி பவுன்கள் பெற்று முதலில் அடியார்களில் சிலரை அக்கரை கொண்டு சேர்த்தார்.
மீண்டும் சுந்தரரிடம் போய் அவரை ஏற்றி வருகையில்நடு ஆற்றில் சுழல் ஏற்படும்படி ஈசன் ஒரு திருவிளையாடல் புரிந்தார். ஆற்றுச் சுழலில் சிக்கி படகு சுழன்றது . ஓடக்காரனின் கையில் இருந்து பற்றுக் கோல் நழுவியது. அந்தக் கோலை எடுப்பதைப் போல் பாசாங்கு செய்த ஓடக்காரன் நிலை தடுமாறி தண்ணீரில் விழந்து தத்தளித்தான் . படகில் இருந்த சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனை வேண்ட ஓடம் சிறிது தூரம் சென்று பாறையில் மோதி நொறுங்கியது. அந்தச் சமயத்தில் சிவபெருமான் ரிஷபாரூடராகத் தோன்றி யாவரையும் தூக்கிக்காப்பாற்றியதாக வரலாறு வழங்குகிறது, பின்பு சுந்தரர் இந்த தலத்துக்கு வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார்,
திருவாரூரில் ஒருசமயம் நடைபெற்ற விழாவில் அப்பொழுது அரசாண்ட ஈசசோழ அரசன், எல்லாத்தலங்களிலும் உள்ள சுந்தரமூர்த்தி திருவுருவங்களை கொண்டுவந்து விழா நடத்தினான், எல்லா சுந்தரமூர்திகளையும்விட ஆலங்குடி சுந்தரர் திருவுருவம் அவர் மனதை கவர்ந்தது, அதை திருவாரூரிலேயே வைக்க வேண்டும் என்று விரும்பினான்.
அதை அறிந்த ஆலங்குடி சிவாச்சாரியார்கள் சுந்தர மூர்த்தி திருவுருவை, குழந்தைக்கு அம்மை போட்டிருப்பது போல் தொட்டில் கட்டி ஆலங்குடி கொண்டுவந்து சேர்த்தார்கள். அந்த அம்மை தழும்புகளை இன்றும் இங்கே எழுந்தருளியிறுக்கும் சுந்தர மூர்த்தி பெருமாள் மீது காணலாம்.
இந்தத்தலத்தில் உள்ள குரு மூர்த்தியை குருவாரத்தில் விணங்கி வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும்.
வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி விசேஷ தரிதன விழா நடைபெறுகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்குப் பிரவேசிக்கும் காலங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையும் நடைபெறும். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தொடங்கி பத்து நாட்கள் உற்சவ விழாவும், தக்ஷிணாமூர்த்திக்குத் தேர்த்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.
திருத்தலக் குறிப்புகள்:
தலத்தின் பெயர்: ஆலங்குடி
சுவாமியின் திருநாம் : ஆபத்சகாயர், குரு தக்ஷிணாமூர்த்தி.
எங்கே உள்ளது : தமிழ்நாட்டில்,குடந்தையில் இருந்து பதினேலு கி.மீ, தொலைவில்.
எப்படிச் செல்வது : சென்னையிலிருந்தும்
கோவையிலிருந்தும் கும்பகோணத்துக்கு ரயில் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து பேருந்து கார் மற்றும் ஆட்டோ மூலம் ஆலங்குடி சென்றடையலாம்.
எங்கே தங்குவது : கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் : காலை
6.00 முதல்
12.00 வரை
மாலை 4.00
முதல் 9.00
வரை
கோயில் முகவரி :
நிர்வாக அலுவலர்,
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆலங்குடி 612
801.
தொலைபேசி : 04374 269407.
லேபிள்கள்:
sparkkarthikovai,
ஆலங்குடி,
குரு பகவான்,
நவகிரக கோவில்கள்
Subscribe to:
Posts (Atom)