Friday, April 07, 2017

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில்


பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில்
விழுப்புரம் மாவட்டத்தில் பூவரங்குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் தென் அகோபிலம் என்று போற்றப்படுகிறது.
நரசிம்மர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். இத்திருத்தலம் தென்அஹோபிலம் என்று போற்றப்படுகிறது.
இத்திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூண் வழிபாடு :
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஆதிகாலத்தில் பூவரசன் குப்பத்தில் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள் ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
தென் அகோபிலம்:
நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலா தனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் "அகோபிலம்' என் றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் "தென் அகோபிலம்' எனவும் அழைக்கப்படுகிறது.
பதவி உயர்வு தருபவர் :
தீயசக்திகளை அழிக்க கடவுள் அவதாரம் எடுப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள். ஒரு கடவுள் எந்த நோக்கத்துக்காக அவதாரம் எடுக்கிறாரோ, அந்த நோக்கம் முடிந்ததும், அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும்.
மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தார். ராவணனை அழித்ததும் அவர் அவதாரம் முடிந்து போனது. அதுபோல தான் கிருஷ்ண அவதாரமும். கம்சனை வதம் செய்த பிறகு அந்த அவதாரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நொடியில் தோன்றி தன் பக்தன் பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த இணையற்ற சிறப்பு அந்த அவதாரத்துக்கு உண்டு.
இரண்யனை வதம் செய்து அழித்த பிறகு நரசிம்மர் உடனே தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளவில்லை. அதற்கு பதில் தன் பக்தன் பிரகலாதன் சீரும், சிறப்புமாக வாழ எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தார். ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவர் பிரகலாதனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாட்டை ஆள்வதற்கு ஏற்ப பிரகலாதனை தயார்படுத்தினார். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். தொடர்ந்து வழிகாட்டவும் உறுதி அளித்தார்.
எனவே நரசிம்மர், ராஜபரிபாலனம் செய்ய உகந்தவர் என்று புகழப்படுகிறார். இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இத்தலத்து இறைவனிடம் சரண் அடைவது அதிகரித்தபடி உள்ளது. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் இத்தலத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த வழிபாடு பூவரசன்குப்பம் தலத்தில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.
பூவரசங் குப்பம் :
விழுப்புரம் மாவட்டத்தில் பூவரங்குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் தென் அகோபிலம் என்று போற்றப்படுகிறது.
விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருந்து பூவரசங்குப்பம் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் இருக்கிறது.
கோவில் மூலவர் சன்னதி முன்னால் கொடிமரமும் அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த தலத்தின் விஷேசம் என்னவென்றால் மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராக மிகவும் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இரணிய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.
அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் (அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள்) மகாலட்சுமியை வேண்டினார்கள்.
ஸ்ரீலட்சுமியானவள் நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்து, சாந்தரூபியாக காட்சியளித்தார்.
திருமால் காட்சிக் கொடுத்த இடம்தான் பூவரசன்குப்பம். இப்பூவுலகில் வேறு எங்கும் காணாதக் காட்சியாக நரசிம்மர் சாந்த சொரூபனாக காட்சியளித்ததால் இன்று முதல் நீங்கள் இருவரும் இவ்வாறே பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என சப்தரிஷிகள் வேண்ட அவ்வாறே இருக்குமாறு வரமளித்தாரம் இந்த லட்சுமிநரசிம்மர்.
இந்த தலம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-
முன்காலத்தில் தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். திருநீறும், திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் இடிக்கப்பட்டன.
பல்லவனின் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டாராம் நரஹரி. என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தாராம் நரஹரி. மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான்.
சாபவிமோசனம் பெற நரஹரியை நாடெங்கும் தேடினான் மன்னன். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள் தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான்.
திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான். அவனையும் அறியாமல் கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக் கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும் என்றும், மேலும் இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்` எனசொல்லியதாம்.
மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே, மதமும் மறைந்தது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான். பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சியும் தொடங்கியது.
கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்கவல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.
இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண் ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.
ஒரு கண் நரசிம்மர் மீது, மற்றொரு கண் பக்தர் மீது :
முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
உடனே நரசிம்மர், "நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்" என்றார். அதற்கு லட்சுமி, "கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.
பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.
இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன. இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.
தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு. பூவரசன்குப்பம் தலம் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த திருக்கோவில் பட்டரான பார்த்தசாரதியை 9585178444 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை பெறலாம்.
திருப்பணிக்கு உதவுங்கள் :
பூவரசன் குப்பம் தலத்தில் மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
பூவரசங்குப்பம் ஆலயத்தில் தற்போது பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. நீங்களும் இந்த திருப்பணியில் பங்கேற்கலாம். அந்த புண்ணியத்தைப்பெற நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தேவஸ்தானம்,
பூவரசன்குப்பம் - 605 105.
மோட்ச குளம் வழி,
விழுப்புரம் மாவட்டம்.
போன்: +91-413 269 8191, 99435 30122.
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆலயம் சென்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.