Monday, March 21, 2016

கோ தானம் தரும் ஆமலகீ ஏகாதசி!

பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி என்பார்கள். இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தடியை சுத்தமாக்கி, நீர் தெளித்து, அங்கு ஸ்ரீபரசுராமனின் திருவடிவம் வரையப்பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, வழிபட வேண்டும்.
  அதன் பிறகு நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பங்குனி உத்திரம் மங்காத செல்வம் தரும் பங்குனி!



   மங்கலங்கள் நிறைந்த மாதம் பங்குனி. மலைமகளை சிவனார் மணம் புரிந்த மாதம். ஆயிரம் பசு மாடுகளை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம். தடைகளை நீக்கி வெற்றியை அருளும் மாதமும் இதுவே!
அரங்கனை விபீஷணர் பெற்ற மாதம். திருஅரங்கர், திருஅரங்கத்தை அடைந்த மாதம். பக்தர் பலர் காவடி எடுத்துப் பழநி தரிசனத்துக்குச் செல்லும் மாதம்... எனப் பல மகிமைகள் கொண்டது இந்த பங்குனி மாதம்!
விஜயா ஏகாதசி:
எந்த விதத் தடைகள் வாழ்வில் இருந்தாலும் அதை நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதத் தேய்பிறையில் வருவது இது. கோரிக்கைகளை நிறைவேற்றி, பலன்களை அளிப்பது இந்த விஜயா ஏகாதசி.
  வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து முறைப்படி வழிபட வேண்டும்.
   மறு நாள் துவாதசி அன்று, சாது அல்லது அடியவர் அல்லது ஏழைக்கு உணவு அளித்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தர வேண்டும். அதன் பிறகு விரதத்தை பூர்த்தி செய்து, சாப்பிடலாம் என்கிறார் பாலாஜி குருக்கள்!
'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.
7022638881 a free subscription in தமிழ்.

பழங்களும் பலன்களும்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர்,  நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால  வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது-   அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி,  வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி'  அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில்,  அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது,   எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை  என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.
சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.
3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.
கிவி பழம்;
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!
ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals)   இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல்  நம்மைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி;
மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா& பப்பாளி
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத்  தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர்  அல்லது பானங்கள் குடிப்பது =  புற்று நோய்.
ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;;
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் என்பது உறுதி. . .
With Ranimma Rani
மொழியாக்கம் உதவி:- Hema Mani

Monday, March 07, 2016

அள்ளிக் கொடுங்கள் வில்வம்! அள்ளிக் கொடுப்பார் ஈசன்!


    ராமபிரான் காட்டுக்கு சென்ற போது கங்கை நதியை கடக்க உதவி செய்தவன் குகன். இவன் முற்பிறவியில் வேடனாக பிறந்து மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை. இருள் கவியத் துவங்கியது.
  இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடிவிட்டுத்தான் செல்லவேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் கடும்பசி. காலையில் இருந்தே சாப்பிடவில்லை. இருட்டிவிட்டதால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் மேது ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.
பசி மிகும் போது தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து நீரை குடித்துக் கொண்டான். தூங்காமல் இருக்க வேண்டும் என்று அந்த மரத்தின் இலைகளை பிய்த்து கீழே போட்டபடியே இருந்தான். அவன் குடிக்கும் போது தண்ணீர் கீழே சிந்தியது. இப்படி விடிய விடிய விழித்து இருந்தான் அந்த வேடன்.
   பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். அங்கு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன்மேல் வில்வ இலைகளை பறித்துப் போட்டிருந்தான் இவன். ஆனால் இவன் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டான்.
  அவன் தன்னையறியாமல் விழித்திருந்து சிவனை வழிபட்ட தினம் சிவராத்திரி தினமாகும். இதனால் அவனுக்கு சிவனின் கடாட்சம் கிடைத்தது. மறுபிறவியில் அவன் குகனாக பிறந்தான். ராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைத்து. குகனோடு ஐவரானோம் என்று ராமனின் சகோதரன் என்ற நிலைக்கு உயர முடிந்தது.
தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு பெரிய பலன் கிடைத்தது. இவ்வளவு சிறப்பு மிக்க விரதத்தை சிரத்தையாக அனுஷ்டித்தால் அதன் பலனை சொல்லிட முடியா அளவிற்கு இருக்கும்.
   குரங்கு ஒன்று மரத்தில் இருந்தபடி, வில்வ இலைகளை விளையாட்டாகப் பறித்துப் போட்டது. அந்த இலைகள், மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் குரங்கு சாப விமோசனம் பெற்று, குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தியாகும் வரத்தைத் தந்தருளினார் சிவனார் என்றும் புராணத்தில் கதை உண்டு!
   ஆகவே இந்த சிவராத்திரி நாளில்... நம்மால் முடிந்த அளவு வில்வங்களை சிவனாருக்கு வழங்குவோம். இதில் குளிர்ந்து போய், நம்மையும் குளிரச் செய்வார் ஈசன்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

இம்மையிலும் நன்மை... மறுமையிலும் நன்மை!

வி.ராம்ஜி(MyTemple team - SS12)
   மிகவும் எளிமையானது இந்த விரதம். சிவராத்திரியன்று காலையில் நீராடி சுத்தமான ஆடை அணிந்து சிவாலயத்திற்கு சென்று  'சிவ சிவ' என்று சொல்லிக் கொண்டே இருங்கள். 'நமசிவாய' என்று சிவநாமம் சொல்லுங்கள்.
   வழிபட்டு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். இன்று முழுவதும் திட ஆகாரத்தைத்
தவிருங்கள். உடல் நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் பழம் சாப்பிடலாம். மாலையில் சிவாலயத்திற்கு  சென்று, பழம், பால், அபிஷேகத் திரவியங்களை இயன்ற அளவு சிவனாருக்கு வழங்குங்கள்.
இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.
அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்கு சென்றுவழிபட வேண்டும்.  பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்று அமாவாசை தினம் வருமாதாலால் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் தர்ப்பணம் செய்து முடித்து பிறகே உணவருந்த வேண்டும்.
   இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் செல்வ வளமும் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார் காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் ஸ்தானீகர் ராஜப்பா குருக்கள்.
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

சதாசர்வ காலமும் சதாசிவன்!

வி.ராம்ஜி(MyTemple team - SS9)
  தினமும் சிவபெருமானை வழிபட்டு சிவநாமத்தை உச்சரித்து வந்தாலே போதும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்! அப்படியிருக்க, சிவராத்திரி விரதமிருந்து வழிபடுவது எத்தகைய புண்ணியத்தைத் தரும் என யோசியுங்கள்.
  இன்று சோம வாரம். மகா சிவராத்திரி. இந்த நாளில் விரதம் அனுஷ்டியுங்கள்.  ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும்!
  ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை  சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமை மிக்கதாக போற்றப்படுகிறது.
  தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன என்கிறார் பாலாஜி குருக்கள்.
  சிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை  'மகா' எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே போல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் சதா சேர்த்துச் சொல்வதில்லை. 'சதா' என்றால் 'எங்கும் எப்போதும்' என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்! 
    அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி!  மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.
  இன்று மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம், பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும். இதில் கலந்துகொண்டு, சிவனருளைப் பெறுங்கள் என்கிறார் பாலாஜி குருக்கள்!

சிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்!

வி.ராம்ஜி
குமரி மாவட்டத்தில், சிவாலய ஓட்டத்தில் தரிசிக்க வேண்டிய 12 கோயில்களில், முதல் நான்கு ஆலயங்களைப் பார்த்தோம். அடுத்த 8 ஆலயங்கள்...
5. பொன்மனை: சுமார் 7 கி.மீ. தொலைவு. தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் வெகு பிரசித்தம். இங்கு, கிழக்கு முகமாக சிவனார் அருள்புரிகிறார். அடுத்து பன்றிப்பாக தரிசனம்!
6. பன்றிப்பாகம்: சுமார் 11 கி.மீ. தொலைவு. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள  பன்றிப்பாகம் ஆலயத்தில், சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் விநாயகர் மற்றும் நாகராஜாவுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன. தரிசனத்துக்குப் பிறகு, பக்தர்கள் கல்குளம் நோக்கிச் செல்கின்றனர்.
7. கல்குளம்: பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரம் ஓடி, புகழ் பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
இங்கு ஆதிமூல மூர்த்தியாக, 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுகின்றனர். அடுத்து,  மேலாங்கோடு தரிசனம்.
8. மேலாங்கோடு: சுமார் 3 கி.மீ. தொலைவு. மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயம், பத்மனாபபுரம் கோட்டை ஆகியவையும் அருகில் உள்ளன. இதையடுத்து திருவிடைக்கோடு நோக்கி தொடரலாம்.
9. திருவிடைக்கோடு: சுமார் 5 கி.மீ. தொலைவு. மேற்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம். கேரள- தமிழக கட்டடக் கலை பாணிகளைக் கொண்டு கட்டப்பட்டது. அடுத்து திருவிதாங்கோடு தரிசனம்.
10. திருவிதாங்கோடு: சுமார்  8 கி.மீ. தொலைவு. சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு இங்கே தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.அடுத்து திருப்பன்றிக்கோடு.
11. திருப்பன்றிக்கோடு:  சுமார் 9 கி.மீ. தொலைவு. பள்ளியாடி அருகில் உள்ள ஆலயம். ஆலய விமானத்தில் நரசிம்ம மூர்த்தி, ஐயப்பன் சிலைகள் உள்ளன. சிவன்,- நந்தி இருவரும் முறையே வேடன் &  பன்றியாக உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவனுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இது என்கிறது புராணம்! பிறகு, திருநட்டாலம்.
12. திருநட்டாலம்: திருப்பன்றிக்கோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் ஓடி, திருநட்டாலத்தில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்யவேண்டும்!
இந்தக் கோயிலில், ஸ்ரீசங்கரநாராயணர் எனத் திருநாமம் விஷ்ணுவுக்கு! 12-வது ருத்திராட்சம் விழுந்த இங்கு, வியாக்ரபாதர் இந்த ஆலயத்தை அமைத்தாராம்! இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானையும் சங்கரநாராயணரையும் தரிசித்துத் திரும்பலாம்!

கோவிந்தா... கோபாலா...
தென்னாடுடைய சிவனே போற்றி!

சிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்!

வி.ராம்ஜி
குமரி மாவட்டத்தில், சிவாலய ஓட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களைத் தரிசிப்போமா?  நான்கு நான்கு கோயிலாகப் பார்ப்போம்!
1. திருமலை: சிவாலய ஓட்டம் துவங்கும் முன்சிறை என்ற ஊரை ஒட்டியுள்ள திருமலை சிவாலயம் முக்கியத்துவம் வாய்ந்தது. மலை மேல் இருக்கும் கோயிலுக்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் தனித் தனி சந்நிதிகள் உண்டு. இங்கு ஸ்ரீராமர் வந்து வழிபட்டதாகச் சொல்வர். பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப்பெருமான் இங்கு சிறைப்பிடித்ததாகவும், அதனால் இந்த ஊர் முன்சிறை ஆனது என்றும் சொல்வார்கள். திருமலை கோயிலில் சாயரட்சை பூஜை முடிந்ததும், சிவாலய ஓட்டம் துவங்கும். பின், மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சியை அடைவார்கள்.
2. திக்குறிச்சி: திருமலையில் இருந்து 12 கிமீ. தொலைவு. தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆலயம்.  இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்குத்  தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியே 14 கி.மீ. தொலைவு ஓடி, திற்பரப்பு தலத்தை அடையலாம்!
3. திற்பரப்பு: மேற்கு நோக்கிய,  வட்ட வடிவிலான ஆலயம். இங்கு மகாதேவர், முருகன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், அம்மன் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. வழக்கமாக, சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி இருக்கும். ஆனால், இங்கு சிவனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, கருவறை ஓரத்தில் உள்ளது. இதையொட்டிய திற்பரப்பு அருவி இன்னும் ரம்மியம் கூட்டுகிறது. இதையடுத்து திருநந்திக்கரை தல தரிசனம்!  
4. திருநந்திக்கரை: குலசேகரம் வழியே 8 கி.மீ. தொலைவு.  இங்கு, பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்குள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டாராம். இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப் படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் உண்டான ஆலயம். கோயிலையொட்டி குகைக் கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளன. அடுத்து, பக்தர்கள் பொன்மனை நோக்கி ஓடுகின்றனர்.
இன்னும் எட்டுக் கோயில்கள் உள்ளன.

‘கோவிந்தா... கோபாலா... கோஷம்! குமரியில் சிவாலாய ஓட்டம்!







வி.ராம்ஜி
'அரியும் சிவனும் ஒன்று' என்பதை உணர்த்தும் விழாக்களும் விசேஷங்களும் இங்கே நிறையவே உண்டு. கடைக்கோடியில் உள்ள கன்யாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் 'சிவாலய ஓட்டம்' என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம்!
   மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் என அழைக்கப்படுகிறது.
  சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு எப்படி வந்தது? அந்தக் கதையைப் பார்ப்போமா?
இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படி உருவம் எடுத்தார் என்பார்கள். புருஷாமிருகம் சிவபக்தன். விஷ்ணு ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும்.
'தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது!' என்று நம்பியவன் பீமன். புருஷாமிருகத்துக்கும் பீமனுக்கும் 'அரியும் சிவனும் ஒன்று'  என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் திருவுளம் கொண்டார்.
ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு  புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். 'வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி?' எனத் தயங்கினான் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, ''பயப்படாதே.  உன்னிடம் 12 ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்!'' என்றார். அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், 'கோவிந்தா, கோபாலா!' என்று கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், 'கோவிந்தா, கோபாலா' என்று மீண்டும் குரல் எழுப்பினான்.
புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த,  பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.
  இப்படி, 11 இடங்களைக் கடந்து 12&-வது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அவனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், 'உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!' என்றான். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், 'ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே!'' என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், 'அரியும் சிவனும் ஒன்றே!' எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க  புருஷாமிருகம் உதவியது.
  இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலய ஓட்ட தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள்.
'கோவிந்தா... கோபாலா' எனும் கோஷமிட்டபடி  குமரி மாவட்டம் திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். இப்படியாக ஓடி 12 ஆலயங்களையும் தரிசிப்பார்கள்.

குளிரக் குளிர அபிஷேகம்!

வி.ராம்ஜி
மகா சிவராத்திரி நன்னாளில், நான்கு கால பூஜைகள் சிவனாருக்கு அமர்க்களமாக நடைபெறும். அப்போது ஒவ்வொரு கால பூஜையிலும் என்ன வித அபிஷேகம், எந்த நைவேத்தியம், எதைப் பாராயணம் செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்கிறார் பாலாஜி குருக்கள்!
முதல் கால பூஜை : பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம், வில்வம் மற்றும் தாமரையால் அர்ச்சனை, பச்சைப் பயிறு பொங்கல் நைவேத்தியம். ரிக்வேத பாராயணம் செய்வது வளம் சேர்க்கும்!
இரண்டாம் கால பூஜை: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த அபிஷேகம். பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி மற்றும் வில்வ அர்ச்சனை, பாயசம் நைவேத்தியம் வாழ்வை இனிக்கச் செய்யும். யஜுர் வேத பாராயணம் செய்தால் சந்ததி சிறக்கும்!
மூன்றாம் கால பூஜை: தேனபிஷேகம். பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை மற்றும் வில்வத்தால் அர்ச்சனை. எள் அன்னம் நைவேத்தியம், பித்ரு சாபம் நீக்கும். சாமவேத பாராயணம் சகல ஐஸ்வரியங்களை வழங்கும்!
நான்காம் கால பூஜை : கருப்பஞ்சாறு அபிஷேகம்.  அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்த மலர்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை, சுத்தான்ன நைவேத்தியம் நிம்மதி தரும். அதர்வண வேத பாராயணம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi"

எத்தனை... எத்தனை... மகா சிவராத்திரி நாளில்!


வி.ராம்ஜி
* மகா பிரளயத்தில் உலகம் அழிய... மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, உமையவள் சிவனாரை நோக்கி கடுந்தவமிருந்தது இந்தத் திருநாளில்தான்!
* ஈசன், லிங்கத்தில் பிரசன்னமானது இந்த நாளில்! 
* அடி- முடி தேடிய விஷ்ணுவுக்கும்  பிரம்மாவுக்கும்  சிவனார் காட்சி தந்த நன்னாளும் இதுவே!
* பாற்கடலில் கடையும்போது வெளியான விஷத்தை சிவபெருமான் சாப்பிட... அதை விழுங்காதபடி தடுத்தார் உமையவள். இதனால், ஈசனுக்கு  நஞ்சுண்டன், நீலகண்டன் எனும் திருநாமங்களைப் பெற்றார். அந்த நாளும் மகாசிவராத்திரிதான்!
* அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் எனும் அஸ்திரத்தைப் பெற்றது இந்த நாளில்!
* பகீரதன் ஒற்றைக் காலில் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்!
* திருக்கடையூர் திருத்தலத்தில்... மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த அற்புதமான நாளும் இதுவே!
* கண்ணப்ப நாயனாரின் கதை தெரியும்தானே. சிவனாருக்காக, தன் கண்ணையே பெயர்த்தெடுத்துத் தந்தாரே... அது இந்த நாளில்தான்!
* ஸ்ரீபார்வதிதேவி தவமிருந்து வழிபட்டு சிவனில் பாதியைப் பெற்ற புனித நாளும் மகா சிவராத்திரியில்தான்!
- இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi"

விடிய விடிய விரதம்... சிவ தரிசனம்!

வி.ராம்ஜி
  மகா சிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களும் பூக்களும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும்.  சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்!
  சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
  சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்து எதுவும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருள் கிடைக்கப் பெறலாம். இம்மையிலும் மறுமையிலும் காத்தருள்வார் சிவனார்!
   சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், 'சிவ சிவ' என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கியது. அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் சிவனார் என்கிறது புராணம்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi"

பஞ்ச சிவராத்திரிகள்!

வி.ராம்ஜி
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மகா சிவராத்திரி புண்ணியம் நிறைந்த பலன்களை வழங்கக் கூடிய மகத்துவம் வாய்ந்தது!
இன்னும் சில சிவராத்திரிகள் உண்டு.
நித்ய சிவராத்திரி :  பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி. என்று அழைக்கப்படுகிறது.
மாத சிவராத்திரி : மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசி நாளே  மாத சிவராத்திரி எனப்படுகிறது.
பட்ச சிவராத்திரி : தை மாதத்தில், தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூஜை செய்தல் பட்ச சிவராத்திரி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
யோக சிவராத்திரி: சோம வாரமும் அதாவது திங்கட்கிழமையும் அமாவாசையும் அறுபது நாழிகை இருந்தால், அன்றைய தினம் யோக சிவராத்திரி எனப்படுகிறது.
இந்த ஐந்து சிவராத்திரிகளிலும் விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி இல்லை என்கிறது புராணம்.
அனைத்து விரதமும் மேற்கொள்ள முடியாதவர்கள், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும் விடிய விடிய சிவ தரிசனம் செய்வதும் முக்தியைத் தந்தருளும் என்பது உறுதி!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

தசவதாரம்

சிவனே போற்றி! சிவராத்திரியே போற்றி!

வி.ராம்ஜி
மகா சிவராத்திரி! ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய்,  பிரமாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகா சிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது.
உலக மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனாரையும் உமையவளையும் வணங்கித் தொழவேண்டிய தினம். உலகம்மை, உலக மக்களுக்காக, சிவனாரை பூஜித்த திருநாள் இது!
பிரபஞ்சத்துக்கு பிரளயம் மிகவும் அவசியம். அப்போது உலகம், சிவனாரிடம் ஒடுங்கும். அப்படிப் பிரளய நாளில்... ஒடுங்கும் தருணமே சிவராத்திரி என்கிறது புராணம். அந்தநாளில் ஈசனைத் தவிர எவரும் இல்லை. அதேநேரம் சிவனாரில் பாதியான சக்தியும் உடனிருந்தாள் என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்!
இந்த நாளில்... முறைப்படி விரதம் இருந்து சிவனாரை வழிபடுவோம். சகல வளங்களையும் பெறுவோம்!
'இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி சிவனாரிடம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தருளினார் ஈசன்! எனவே, மற்ற நாளை விட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
  சிவராத்திரி மகிமையை சிவனாரே நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தார். பின்னர் நந்திதேவர் சிவகணங்கள் அனைவருக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக உபதேசித்தார்.
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 9865442911 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com