Monday, March 07, 2016

சிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்!

வி.ராம்ஜி
குமரி மாவட்டத்தில், சிவாலய ஓட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களைத் தரிசிப்போமா?  நான்கு நான்கு கோயிலாகப் பார்ப்போம்!
1. திருமலை: சிவாலய ஓட்டம் துவங்கும் முன்சிறை என்ற ஊரை ஒட்டியுள்ள திருமலை சிவாலயம் முக்கியத்துவம் வாய்ந்தது. மலை மேல் இருக்கும் கோயிலுக்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் தனித் தனி சந்நிதிகள் உண்டு. இங்கு ஸ்ரீராமர் வந்து வழிபட்டதாகச் சொல்வர். பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப்பெருமான் இங்கு சிறைப்பிடித்ததாகவும், அதனால் இந்த ஊர் முன்சிறை ஆனது என்றும் சொல்வார்கள். திருமலை கோயிலில் சாயரட்சை பூஜை முடிந்ததும், சிவாலய ஓட்டம் துவங்கும். பின், மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சியை அடைவார்கள்.
2. திக்குறிச்சி: திருமலையில் இருந்து 12 கிமீ. தொலைவு. தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆலயம்.  இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்குத்  தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியே 14 கி.மீ. தொலைவு ஓடி, திற்பரப்பு தலத்தை அடையலாம்!
3. திற்பரப்பு: மேற்கு நோக்கிய,  வட்ட வடிவிலான ஆலயம். இங்கு மகாதேவர், முருகன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், அம்மன் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. வழக்கமாக, சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி இருக்கும். ஆனால், இங்கு சிவனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, கருவறை ஓரத்தில் உள்ளது. இதையொட்டிய திற்பரப்பு அருவி இன்னும் ரம்மியம் கூட்டுகிறது. இதையடுத்து திருநந்திக்கரை தல தரிசனம்!  
4. திருநந்திக்கரை: குலசேகரம் வழியே 8 கி.மீ. தொலைவு.  இங்கு, பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்குள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டாராம். இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப் படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் உண்டான ஆலயம். கோயிலையொட்டி குகைக் கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளன. அடுத்து, பக்தர்கள் பொன்மனை நோக்கி ஓடுகின்றனர்.
இன்னும் எட்டுக் கோயில்கள் உள்ளன.

No comments: