Wednesday, February 26, 2014

வறட்சி நீக்கி வளம் சேர்க்கும் கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி

                                             
முழு முதற் கடவுளான கணபததிக்குச் சிறப்புகள் பல உண்டு.

திரிபுர சம்ஹார சமயத்தில் அசுரர்களுடன் சிவபெருமான் போரிட்ட போது தேர்ச் சக்கர அச்சு முறிந்தது,

மஹாதேவன் மஹாகணபதியை வேண்ட தடை விலகி போரில் வெற்றி கிட்டியது,

பரமேஸ்வரனை அடையப் பார்வதி கடும்தவம் புரந்தாள்• காட்சி கிட்டவில்லை,சதுர்த்தி நாயகனுக்கு விரதம் இருந்து பூஜை செய்ததும் பரமேஸ்வரன் காட்சி அளித்து ஏற்றுக்கொண்டார்

வள்ளியை வசீகரிக்க வேலன் வேடன்,விருத்தன் என்று பல வேடம் தரித்தும் முருகனுக்குக் காரியம் கைகூடவில்லை•

றுதியில் முருகனின் வேண்டுதலுக்கு இணங்க,அண்ணன் யானையாக வந்திருந்து,வள்ளிக்கும்,

முருகனுக்கும் மணம் முடித்து வைத்தார்.

இப்படி எல்லா தெய்வங்களுமே தங்கள் காரியம் கைகூட கணபதியின் தயவு நாடுகின்றனர்.

ஆலயங்களில் நடக்கும் பூஜையாக  இருந்தாலும்,வீடுகளில் நடக்கும் பூஜையாக இருந்தாலும் முதல் பூஜை விநாயகருக்குத்தான்.

மஞ்சள்,சந்தனம்,களிமண்,சாணம்,என்று எதை வேண்டுமானாலும் உருட்டிப் பிடித்து அதை விநாயகராக ஏற்று பூஜை செய்யலாம்.

அவருடைய அருள் கிடைக்கும்

விநாயகருக்கு முன்பாக நின்று தலையில் குட்டிக்

கொள்ளும் வழக்கம் இன்று வரை இருந்து வருகிறது.இப்படிச் செய்வதால்,சில முக்கிய நரம்புகள் பலப்பட்டு நினைவாற்றல் அதிகரிப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது.

ஆனை முகத்தோனுக்கு அருகம் புல்லை வைத்து அர்ச்சித்தாலே அனைத்து நலன்களும் அருளுவார்.அருகம்புல்லை அப்படியே மென்று உண்ணலாம்.சாறாகவும் அருந்தலாம்.அது பல விதமான நோய்களை வராமல் தடுக்கும்.வெண்குஷ்டத்திற்கு தலைசிறந்த மருந்தாகும்.

இத்தனை சிறப்புகள் கொண்டதால் தான் விநாயகருக்கு மட்டும் வீதி தோறும் கோயில்கள் அமைந்துள்ளன.ஆற்றங்க

   ரையில்,அரசமரத்தடியில்,குளக்கரையில்,மலையில் என எங்கும் விநாயகர் ஏற்றமுடன் எழுந்தருளுவார்.

வசீகர அழகு கொண்ட கவுதம மகரஷியின் மனைவி.அவளைக் கண்ட இந்திரன் மோகம் கொண்டான்.ஆசிரமத்தில் முனிவர் இல்லாத ஒரு சமயத்தில்,தேவேந்திரன் கவுதமராக உருமாறி அகலிகையை அடைந்து தனது இச்சையைத் தணித்துக் கொண்டான்.

முக்காலத்தையும் உணரும் வல்லமை வாய்ந்த முனிவர் கவுதமர் தேவேந்திரனின் இந்தத் தீச்செயலையும் உணர்ந்தார்.ஆங்காரம் மிகுந்து தேவேந்திரன் உடல் முலுவதும்பிளவு கொண்ட புண்கள் உண்டாகட்டும் என்று சபித்தார்.

இந்திரன் வெளியில் தலைகாட்ட முடியாமல் தடாகத்தில் தாமரைத் தண்டினுள் ஒளிந்து கொண்டான்.இந்திரலோகத்தில் பணிகள் ஸ்தம்பித்தன.தேவர்கள் கவுதம ரிஷியை நாடி தேவேந்திரன் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டனர்.

கனிவு மிக்க கவுதமரும் பெருந்தன்மையுடன் பிரகஸ்பதியை அழைத்து கணபதியின் சடாட்சர மந்திரத்தை உபதேசித்து இந்த மந்திரத்தை தேவேந்திரனுக்கு உபதேசி என்று ஆணையிட்டார். அதன்படி உபதேசிம் பெற்ற உடனே பழைய உருவம் திரும்பவும் கிடைத்தது இந்திரனுக்கு.

அகலிகை கல்லாக உறைந்து விட்டதால் கவுதமர் ஆசிரமம் துறந்தார்.யாத்திரை மேற்கொண்டு தேசம்,தேசமாகத் திரியலானார்.

அவனியில் ஒரு கிராமம் வறண்டு இருந்த்து முன் வினைப்பயன் காரணமாகவோ,ஊளியின் உத்தேசம் காரணமாகவோ ஊர்மக்கள் அடாத அல்லல்களை அனுபவித்தனர்.தாகத்திற்கு நீரும்,பசிக்கு உணவும் இன்றி மக்களோடு சேர்ந்து கால்நடைகளும் மாண்டு விழுந்து கொண்டிருந்தன.

கவுதமர் அந்த ஊரை அடைந்தார்.விதியை மாற்ற வல்ல வேத விற்பன்னர் ஒருவர் தங்கள் ஊருக்கு வந்ததைக் கண்டு விட்ட மாதிரி மனம் மகிழ்ந்தனர். கவுதமரின் கால்களில் விழுந்து,பஞ்சம் போக்குமாறு அந்தப் பரதேசியிடம் வேண்டிக் கொண்டனர்.

மக்கள் நலனுக்காகவே மண்ணுலகை வலம் வந்து கொண்டிருந்த கவுதமர் மணம் இறங்கினார்.

இந்த ஊருக்கு ஏனிந்த நிலை என்று அகக்கண்ணால் ஆராய்ந்தார்.அங்கே அகத்திய மாமுனி பிரதிஷ்டை செய்திருந்த ஆனைமுகத்தோனின் சிற்பம் ஒன்று மறைந்திருப்பதை உணர்ந்தார்.

இப்படியும்,அப்படியுமாக எட்டி நடை போட்டு ஊரில் ஒரு மேட்டினை அடைந்தார்.ஏர்க்கலைப்பையை எடுத்து வரச்சொல்லி,அந்த மேட்டினை ஆழ உழுமாறு ஊர் மக்களிடம் உரைத்தார்.

அந்த நாழிகை முடிவதற்குள்ளாகவே,அகத்தியர் பிரதிஷ்டை செய்திருந்த ஆனைமுகத்தோன் மண்ணில் இருந்து வெளிப்பட்டார்.

கவுதமர் கணபதி சடாட்சர மந்திரத்தை உச்சரித்து ஆனைமுகத்தோனை வேண்டினார்.மழை மேகங்கள் திரண்டன. வான் வான்மழையைக் கொடையாக அளித்தது.

பயிர்கள் தழைத்தன.பஞ்சம் அகன்றது..கணபதியை தரிசிக்கும் ஆவலுடன் காவிரி நதியும் தன் பாதையை மாற்றியது.அவர் எழுந்தருளியிருந்த இடத்தை நோக்கி வந்தது.முழு முதற்கடவுளை தரிசித்து விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தது.

அங்கே ஓர் ஆலயம் எழுந்தது.கணபதி அருளால் வாழ்வு மீண்டதால் ஊருக்கும் கணபதி அக்ரஹாரம் என்ற பெயரே வழங்கலானது.

பச்சைப் பசேலென விவசாய நிலங்கள் பரந்திருக்க,மையத்தில் கல,கலவெனப் பாயும் காவிரி ஆறு எனப் பாங்குடன் அமைந்த அழகிய கிராமம் கணபதி அக்ரஹாரம்.

கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி காவிரியின் கரையை ஒட்டினாற்போல் செல்லும் பாதையில் சுமார் இருபத்தைந்தாவது கி.மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

சிறிய கோபுரத்தைதரிசனம் செய்து கொண்டு கடந்தால் கொடிமரம்.கொடிமரத்தை வணங்கிக் கடந்தால் கணபதியின் கருவறை.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நிருபிக்க,தாய் தந்தையரைச் சுற்றி வந்து,ஞானப்பழம் பெற்ற ஆனைமுகத்தோன்,சிறிய கர்ப்பகிரகத்தில் எழில் மிகு தோற்றத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

மூஷிக வாகனம் முன்னே அமர்ந்திருக்க,வெள்ளிக் கவசம் புண்டு திருக்கால்களை மடித்து ஆனந்தக் கோலம் காட்டுக்றார் அண்ணல்.

சின்ன உருவம் என்றாலும் சிங்காரத்திலும்,கம்பீரத்திலும் குறைவே இல்லை.சுழிந்த தும்பிக்கையும்,முறம் போன்ற காதுகளும் கவனத்தை ஈர்க்கின்றன.ஓங்கார ரூபத்தில் பிரபஞ்சத்தையே தன் உடலில் அடக்கிய தொந்தி,அந்தத் தொந்தியை அலங்கரிக்கும் நாகாபரணம்.

மஹாகணபதி மிகவும் சக்தி வாய்ந்தவர்.விநாயகருடைய

விரதங்களில் தலைசிறந்த்து சங்கடஹர சதுர்த்தி அன்றைக்குத் தன்னை வழிபடுகிறவர்களின் சங்கடங்களை நீக்கி மஹாகணபதி அருள்புரிகிறார்.மேலும் செவ்வாய்,வெள்ளி,சதுர்த்தி நாட்களில் இவரைப் பூஜித்தால் மிகவும் சிறப்பானது.

விநாயகப்பெருமானின் பதினாறு பெயர்களைக் கொண்ட ஷோடச தோத்திரத்தை கூறி இவரை வணங்கினால் பெண்களின் கல்யாணத் தடை விலகும். குழந்தைகளுக்குகல்வி ஞானம் கைவரும்.வளங்கள் மிக்க ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.

விநாயகர் சதுர்த்தி இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி அன்று ஆலயத்தில் யாகம் வளர்க்கப்பட்டு நான்கு வேதங்ளும் ஓதப்படுகின்றன.

ஊரில் உள்ளவர்கள் தங்களுடைய இல்லத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை.மாறாக அனைவரும் ஆலயத்துக்கு வந்திருந்து இல்லத்தில் கொண்டாடும் சதுர்த்தி விழாவினை இங்கே ஆனந்தமாகக் கொண்டாடி விநாயகரைத் துதித்து வழிபடுகின்றனர்.

மஹாகணபதிக்கு என பவித்ரோத்சவமும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஊரில் கணபதி ஆலயத்தைத் தவிர சிவாலயம் ஒன்றும்,வரதராஜ பெருமாள் எழுந்தருளியிருக்கும்.விஷ்ணு ஆலயம் ஒன்றும் அமைந்திருக்கின்றன.

தன்னை தரிசிப்பவர்களுக்கும்,துதிப்பவர்களுக்கும் எல்லா வளமும் தந்து அருள்வார் விநாயகர். 


கணபதி அக்ரஹாரம் சென்று மஹாகணபதியை தரிசனம் செய்வோம்.அவர் அருளைப் புரணமாகப் பெறுவோம்.
                
    திருத்தலக் குறிப்புகள் :        
தலத்தின் பெயர்: கணபதி அக்ரகாரம்
 
சுவாமியின் திருநாமம்: மஹாகணபதி
 
எங்கே உள்ளது: தமிழ்நாட்டில்,கும்பகோணத்துக்கு அருகில்
 
எப்படிச்செல்வது :
சென்னையிலிருந்து
ம் கோவையிலுருந்தும் கும்பகோணத்துக்கு ரயில்
பேருந்து மற்றும் கார் முலம் செல்லலாம்.
கும்பகோணத்திலிருந்து பேருந்து,
கார் மற்றும் ஆட்டோ முலம்
கணபதி அக்ரஹாரம் சென்றடையலாம்

எங்கே தங்குவது : கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும்,உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் : காலை 6.00 முதல் பகல் 12.00வரை
மாலை 4.00முதல் இரவு 08.00 வரை

No comments: