Thursday, February 16, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில், பவளமலை!...

அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில், பவளமலை
★ ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியபாளையத்தில் பவளமலை எனும் அழகிய குன்றில் அருள்பாலிக்கும் முருகர் ஆலயமாகும். பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். துர்வாச மகரிஷி இத்தல முத்துக்குமாரசுவாமியை வணங்கி வழிபட்டுள்ளார்.
மூலவர் : முத்துகுமாரசுவாமி
அம்மன் : வள்ளி தெய்வானை
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : பவளமலை, ஈரோடு
தலச் சிறப்பு :
★ பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக்குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்டபகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவளமலையே.
திரிசதார்ச்சனை : திரி என்றால் மூன்று, சதம் என்றால் நு}று. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது.
செவ்வாய் தோஷ பரிகாரம் : பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்ரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
தவத்தில் வள்ளி தெய்வானை : மூலவர் முத்துக்குமாரசுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயுமூலையில் வள்ளி தெய்வானை முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது.
கைலாசலிங்கம் : கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்து இருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோயிலில் பூஜித்து வருவதால் அதை சுயம்புலிங்கமாக (தானாகவே தோன்றும் லிங்கம்) கருதுகின்றனர். கைலாசநாதரை வணங்கினால் நோய் குணமடைகிறது.
தல வரலாறு :
★ வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் நடந்த பலப்பரிட்சையில், சக்தி வாய்ந்த மேரு மலையை தாக்கும் நோக்கத்துடன் மலை மீது மோதினார் வாயு. காற்றின் வேகம் தாங்காமல் மலைச் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அதுவே பவளமலை. ஞானப் பழம் கிடைக்காததால் முருகன் கோபித்துக் கொண்டு பழனியில் வந்து தங்கினார். அதன்பிறகு, உலகத்தார் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என வழிப்படத் தொடங்கினர். அவ்வகையில் பவளமலையில் குமரன் இருப்பதாக எண்ணிய கணவால குலகேஷத்திரத்தைச் சேர்ந்த பக்தர்கள் முருகப் பெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபட்டனர் என்பது வரலாறு.
பரிகாரம் :
★ செவ்வாய் தோஷமுள்ளவர்கள் மூலவர் முத்துக்குமாரசுவாமிக்கு 'திரிசதார்ச்சனை" செய்வதால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது.
★ திருமணத்தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க, தொழில் வளர்ச்சி அடைய இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
★ பிரார்த்தனை நிறைவேறிய உடன் பால் குடம் எடுத்தும், பாலாபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
திருவிழா :
★ திருகார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவை இங்கு விஷேஷமாக கொண்டாடப்படுகிறது.

No comments: