Sunday, February 05, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர், காளையார் கோவில் !...சிவகங்கை

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது.
சொர்ணகாளீஸ்வரர் கோவில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
மூலவர்:சொர்ணகாளீஸ்வரர்.
தாயார்:சொர்ணவல்லி.
தல மரம்:மந்தாரை.
தல விருட்சம்:கொக்கு மந்தாரை.
தீர்த்தம்:கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்.
புராண பெயர்கள் :திருக்கானப்பேர்.
ஊர்:காளையார் கோவில்.
மாவட்டம்:சிவகங்கை.
தல வரலாறு :
🌀 ஒரு முறை சுந்தரர் விருதுநகர் அருகிலுள்ள திருச்சுழி திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோவிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்குள் வந்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தன்னுடைய கால்களை பதிக்க தயங்கிய அவர், இறைவா! உன்னை காண முடியவில்லையே என மிகவும் மனம் வருந்திப் பாடினார்.
🌀 அப்போது சிவபெருமான், தனது நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்டு தனது காளையை அனுப்பி சுந்தரர் நின்ற இடம் வரை சென்று மீண்டும் திரும்பி செல்ல வைத்தார். அந்த காளையின் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லை என்று உணர்ந்தார் சுந்தரர். காளையின் கால் பதிந்த இடங்களில் தான் நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்வுடன் அவ்வழியில் சென்று தரிசனம் செய்தார்.
🌀 காளை வழிகாட்டிய தலம் என்பதால் இவ்வூர் காளையார் கோவில் என பெயர் பெற்றது.
தல சிறப்பு :
🌀 இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சகஸ்ரலிங்கம் இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியரை இங்கு உள்ளது.
🌀 பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும், ஒரு அம்பாளும் மட்டுமே இருப்பார்கள்.
🌀 காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. ஆனால் அம்மனுக்கு சன்னிதி கிடையாது.
🌀 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் மூன்று சிவன், மூன்று அம்பாளுக்கும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
🌀 சோமேசர் சன்னிதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.
🌀 நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் கஜபுஷ்கரணி தீர்த்தம் (யானை மடு) உள்ளது. கோவிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.
🌀 இந்திரன் தனக்கு ஏற்பட்ட சபதத்தை போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.
🌀 இங்குள்ள மூன்று சன்னிதிகளில் தேவாரப்பாடல் பெற்றவர் காளீஸ்வரரே.
பிரார்த்தனை :
🌀 இங்குள்ள சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

No comments: