Thursday, February 09, 2017

தினம் ஒரு திருத்தலம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்!....


பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்
🌀 பழமுதிர்ச்சோலை தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள ஒரு முருகன் கோயிலாகும். இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஒளவையாரை சோதித்தது இத்தலத்தில் தான்.
சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : நூபுர கங்கை
தலவிருட்சம் : நாவல்
தல வரலாறு :
🌠 தமிழ்பாட்டி ஒளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஒளவைக்கு அருள் புரிந்து, இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.
🌠 ஒரு முறை ஒளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஒளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.
🌠 களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா? என்றான்.
🌠 சந்தோஷப்பட்ட பாட்டி வேண்டும் என்றார். உடனே முருகன், பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல், சுட்ட பழத்தையே கொடேன் என்றார்.
🌠 சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஒளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன், பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள் என்று கூறி சிரித்தான்.
🌠 உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர்.
தலச் சிறப்பு :
🌠 இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
🌠 முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு. பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய முருகன்-வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.
🌠 இங்கு வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
🌠 இத்தலத் தீர்த்தமாக நூபுரகங்கை (திருச்சிலம்பாறு) என்ற சுனை உள்ளது. திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும்.
பிரார்த்தனை :
👉 குடும்பத்தில் சந்தோஷம் நிலவவும், பொருள் செல்வாக்கு கூடவும் இங்கு வந்து மக்கள் பிரார்த்திக்கின்றனர்.

No comments: